எங்க தலைக்கு தில்ல பாத்தியா; “பஞ்சாபில் வைரலாகும் தமிழ்” – ஏ.ஆர்.ரகுமான் டைமிங் டுவிட்!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை கொண்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் பரிந்துரைகளை மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பினர்.

இதனை வரைவு அறிக்கையாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். அதில், இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை, கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை 2 ஆண்டுகள் கற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர இந்தி எதிர்ப்பு மாநிலமாக இருக்கும் தமிழகம், அடுத்தக் கட்டப் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் #StopHindiImposition, #TNAgainstHindiImposition போன்ற ஹேஸ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. இந்த சூழலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில், மரியான் படப் பாடலை பஞ்சாபி பாடகர் ஒருவர் பாடும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் ‘சரியான டைமிங்கில் வெளியான பதிவு” என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு வலுக்கத் தொடங்கிய நிலையில், பஞ்சாபில் தமிழ் பரவத் தொடங்கியுள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.