யாழ் – சினிமா விமர்சனம்


இலங்கையில் போர் நடந்து வருவதால் ஈழத்தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அதனை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த கதையில் நாயகன் வினோத் கிஷன், லீமா பாபுவை காதலிக்கிறார். அங்கு நடத்தப்படும் வான்வெளித் தாக்குதலால் லீமா பாபு உள்ளிட்ட அந்த ஊர் மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு செல்கின்றனர்.

அதே நேரத்தில் குண்டுவெடிப்பால் தாயை இழந்த பேபி ரக்‌ஷனாவை தன்னுடன் அழைத்து செல்லும் வினோத், ரக்‌ஷனாவை அவளது அம்மாவிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறார்.

இதுஒருபுறம் இருக்க கைக்குழந்தையுடன் வரும் நீலிமா, அங்கு வரும் இலங்கை ராணுவ அதிகாரியான டேனியல் பாலாஜியிடம் சிக்கிக் கொள்கிறார். விடுதலைப் புலிகளை சேர்ந்த பெண் என்று நினைத்து, நீலிமாவை சரணடையச் சொல்கிறார். இவ்வாறாக நீலிமாவை தன்னுடன் பலவந்தமாக அழைத்துச் செல்ல முயற்சிக்கும் போது டேனியல் பாலாஜி கன்னி வெடி ஒன்றை மிதித்து விடுகிறார்.


மற்றொரு பக்கத்தில் லண்டனின் இருந்து வரும் மீஷா கோஷல் தனது காதலனை தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக இலங்கை வருகிறார். சமீபத்தில் கன்னி வெடியால் அவரின் தாய் இறந்ததால், மீஷாவுடன் வர மறுக்கும் அவரது காதலர், கன்னி வெடியால் வேறு எந்த உயிரும் போகக் கூடாது என்று கன்னி வெடிகளை தேடி அதனை செயலிழக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.

கடைசியில் வினோத் அந்த குழந்தையை அதன் அம்மாவிடம் கொண்டு சேர்த்தாரா? தனது காதலி லீமாவுடன் சேர்ந்தாரா? டேனியல் பாலாஜி, நீலிமா என்ன ஆனார்கள்? மீஷா கோஷல் தனது காதலரை தன்னுடன் அழைத்து சென்றாரா? போர் முடிவுக்கு வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வினோத் கிஷன், லீமா பாபு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாகவே கொடுத்தனர். டேனியல் பாலாஜி வழக்கம்போல தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். நீலிமா, மீஷா கோஷல் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.


இலங்கை ராணுவத்தின் அட்டகாசத்தால் யாழ்பாணத்தில் ஈழத் தமிழ் மக்கள் படும் கஷ்டத்தை மேலோட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். எதையும் மிகைப்படுத்தி காட்டவில்லை.

அதே நேரத்தில் அவர்களது வாழ்க்கையில் அவர் என்னனென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு என்னென்ன தொல்லைகள் வருகின்றன என்பதையும் சொல்ல முயற்சித்திருக்கிறார். டப்பிங் வசனங்களில் தொய்வு இருக்கிறது.

எஸ்.என்.அருணகிரி இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. ஆதி கருப்பையாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சுமார் ரகம் தான்.

மொத்தத்தில் `யாழ்’ சத்தமில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#