நான்கு தலைமுறை கண்ட நடிகை சீத்தாலட்சுமி காலமானார்

சுதந்திரபோராட்ட வீராங்கனையும் எம்.ஜி.ஆர்,சிவாஜி காலம் துவங்கி இன்றைய தனுஷ் வரை நான்கு தலைமுறை நட்சத்திரங்களுடன் நடித்தவருமான பழம்பெரும் நடிகை சீத்தாலட்சுமி காலமானார். அவருக்கு வயது 87.

தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் ராதிகா அவர்களின் தாயார் சீதாலட்சுமி. இவர் நேற்று (28/02/2019) மாலை 6 மணியளவில் காலமானார். கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் உடன் நடித்த பெருமைக்குரியவர் நடிகை சீதா லட்சுமி. எங்கவீட்டு பிள்ளை, அன்னமிட்ட கை, ஆண்டவன் கட்டளை, தாய் மெல் ஆன்மை, அன்பு கரங்கள், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்த கண்ணீர்,ரஜினிகாந்த்வுடன் அன்புக்கு நான் அடிமை, தனுஷுடன் சீடன், ஹிந்தியில் திலிப் குமாருடன் இரும்பு திரை உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பெருமைக்குரியவர். எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாரின் சகோதரியாக நடித்தவர்தான் இந்த சீதாலட்சுமி.

பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி தமிழகத்தில் வளர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர் என்பது ஆச்சரியப்படக் கூடிய ஒரு விஷயம். மேலும் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் நாடகங்களிலும் பங்கேற்று நடித்துள்ளார். திரையுலகில் இவரது சாதனைகளுக்காக கலைமாமணி, கலைச்செல்வி என்கிற பல பட்டங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் கரங்களால் பெற்றவர். தந்தை பெரியார் விருது பெற்றிருக்கிறார்.

இவரது உடல் தற்போது சென்னை நெற்குன்றத்தில் மேட்டுக்குப்பம் எம் ஆர் பள்ளி அருகில் உள்ள மகள் நடன இயக்குனர் ராதிகாவின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.