காதலனை தேடி காதலி நடத்தும் போராட்டம் – நேத்ரா விமர்சனம்

நடிகர் தமன் குமார்
நடிகை சுபிக்ஷா
இயக்குனர் ஏ.வெங்கடேஷ்
இசை ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு ஏ.ஜெயப்பிரகாஷ்
தமன் குமாரும், சுபிக்‌ஷாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த திருமணத்தில் விருப்பமில்லாததால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார் சுபிக்‌ஷா.

இதையடுத்து தமன் குமார், சுபிக்‌ஷாவை கனடாவுக்கு வரவைக்கும் வினய், வேறுஒரு வேலையாக வெளிநாடு செல்கிறார். இந்த நிலையில், கனடா வரும் இவர்களுக்கு அந்த நாட்டு போலீசார் உதவுகிறார்கள். பின்னர், இமான் அண்ணாச்சி வேலை பார்க்கும் ஹோட்டலில் தமன் குமாருக்கு வேலை கிடைக்கிறது.

இந்த நிலையில், தமன் குமார் காணாமல் போகிறார். இதுகுறித்து சுபிக்‌ஷா, போலீசில் புகார் தெரிவிக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்க, தமன் குமார் என்ற ஒருவர் வரவேயில்லை என்றும், சுபிக்‌ஷா மட்டுமே வந்ததாகவும் அனைவரும் கூறுகின்றனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ். இதற்கிடையே வினய் கனடா திரும்புகிறார்.

கடைசியில், தமன் குமாரை மாயமானதன் பின்னணி என்ன? அவர் என்னவானார்? அவரை யார் கடத்தினார்கள்? சுபிக்‌ஷா – தமன் குமார் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமன் குமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் சுபிக்‌ஷா தனது திறமையை நிரூபித்திருக்கிறார். காதல், நட்பு, போராட்டம் என சுபிக்‌ஷாவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஓட்டத்திற்கு வினய் முக்கிய காரணியாகிறார். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

இமான் அண்ணாச்சி ஓரிரு இடங்களில் காமெடி செய்கிறார். ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் காமெடி ஓரளவுக்கு வேலை செய்கிறது. மற்றபடி வெங்கடேஷ், ரித்விகா, வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.

ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படம் பெரும்பாலும் கனடாவிலேயே உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வேகமாக நகர, இரண்டாவது பாதியின் நீளம் அதிகமாக இருப்பது படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கலாம்.

என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.

மொத்தத்தில் `நேத்ரா’ தெளிவில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.