புயலால் பாதித்த சகோதர, சகோதரிகளுக்கு உதவுவோம்..!! நடிகர் அமீர் கான் வேண்டுகோள்..!!


கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரங்கள், வயல் வெளிகள் என பச்சை பசேலாக காட்சியளித்த இடங்கள் இன்று பாலைவனங்களாக மாறியுள்ளன. லட்சகணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து உணவு, உடை, குடிநீர், மின்சார வசதியின்றி நிவாரண முகாம்களில் தவித்து வருகின்றனர். இதேபோல் நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற கடலோர மாவட்டங்களிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கஜா புயல் முற்றிலும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் சேர்ந்து பல தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த பலரும் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அங்குத் துன்பப்படும் நம்முடைய சகோதரர், சகோதரிகளுக்கு உதவுவோம். எந்தவிதத்திலாவது நாம் முயற்சி செய்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவவேண்டும்”. இவ்வாறு நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கஜா புயல் பாதிப்புகாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் நிவாரண உதவி அளித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அமீன் கானின் இந்த டுவிட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.