பட்டினப்பாக்கம் – சினிமா விமர்சனம்


நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் கலையரசன் தனது அம்மா, தங்கையுடன் சேரி பகுதியில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் கலையரசனுக்கு அந்த பகுதி தாதாவான ஜான் விஜய்யிடம் கடன் வாங்கிவிட்டு அதை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். கலையரசனும், பணக்கார வீட்டு பெண்ணான நாயகி அனஸ்வரா குமாரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், கலையரசனின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அம்மாவை காப்பாற்ற லட்சங்கள் செலவாகும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டு புரோக்கரான சார்லியுடன் ஒரு வீட்டுக்கு செல்கிறார் கலையரசன். வயதான பெண் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் கொள்ளையடித்தால் செட்டில் ஆகி விடலாம் என்று சார்லி விளையாட்டாக சொல்கிறார். இதையடுத்து அந்த வீட்டில் திருட முடிவு செய்து கலையரசன் அந்த வீட்டுக்கு செல்கிறார்.


இதுஒருபுறம் இருக்க மனோஜ் கே.ஜெயன் தனது மனைவி சாயா சிங்கை கொடுமைப்படுத்தி வருகிறார். இதனால் மனோஜ் மீது சாயாவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. மேலும் தன்னுடன் பாசமாக பழகும், இளைஞர் ஒருவருடன் சாயா நெருக்கமாகிறார். இதையடுத்து அந்த இளைஞரை ஒருநாள் இரவு தனது அம்மா வீட்டிற்கு வர சொல்கிறார் சாயா.

மேலும் வயதானவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்து வரும் சைக்கோ கொலையாளி சாயாவின் அம்மாவை கொல்ல நினைக்கிறான்.

இவ்வாறாக கலையரசன், சாயா சிங், சைக்கோ கொலையாளி என இவர்கள் சந்திக்கும் போது என்ன நடந்தது? கலையரசன் தனது அம்மாவை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கலையரசன் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞராக சிறப்பாக நடித்தியிருக்கிறார். கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் அவரது நடிப்பு நேர்த்தியானதாக இருந்தது. நாயகி அனஸ்வரா குமாருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். சாயா சிங்குக்கு அழுத்தமான கதாபாத்திரம், அதை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு பாராட்டுக்கள்.


மற்றபடி மனோஜ் கே.ஜெயன், , ஜான் விஜய், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். யோக் ஜபி, ஜாங்கிரி மதுமிதா, சுவாமிநாதன் என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கின்றனர்.

இயல்பான நிறைய இடங்களில் கேட்ட, பார்த்த கதை தான் என்றாலும், திரைக்கதையில் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ஜெயதேவ் பாலசந்திரன். எனினும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்தின் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

ராணா ஒளிப்பதிவும், இஷான் தேவ், பிரணவ் தாஸ், ஸ்ரீஜித் மேனன் இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் `பட்டினப்பாக்கம்’ பார்த்து போங்க.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!