சென்னையில் ‘சிவப்பு விளக்கு’ அமைக்கப்பட வேண்டும் – இயக்குநர் யுரேகாவின் கருத்தால் சர்ச்சை..!!


மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கியவர் யுரேகா. அவர், காட்டுப்பய சார் இந்த காளி எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ஜெய்வந்த்-ஐரா ஜோடி அறிமுகமாக உள்ளனர். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் டைரக்டர் யுரேகா பேசும்போது,

பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. ஜம்மு காஷ்மீர் ஆசிபா, சென்னை சிறுமி என தொடர்ந்து சீரழித்து வருகின்றனர். சிறுசேரியில் வடநாட்டை சேர்ந்தவர்கள் நடத்திய வன்கொடுமை உலுக்கியது. பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டுமானால் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி மிகவும் அவசியம்.

சென்னை பாரீஸை போல் சர்வதேச நகரமாக மாறி இருக்கிறது. வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வருகிறார்கள். வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள். பெரிய நகரங்களான மும்பையிலும், கொல்கத்தாவிலும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. அங்கு 500 ரூபாய் சம்பாதித்தால் 100 ரூபாயை மதுவிலும், 100 ரூபாயை சிவப்பு விளக்கு பகுதியிலும் செலவழித்து விட்டு மீதி தொகையுடன் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் குற்றங்கள் நடப்பது இல்லை.

சென்னையில் சிவப்பு விளக்கு பகுதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று 1992–ம் ஆண்டிலேயே பாலியல் சம்பந்தமான டாக்டர் ஒருவர் தமிழக அரசுக்கு மனு கொடுத்து இருக்கிறார். அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். பல தரப்பு மக்கள் வருகிற இடமாக இருப்பதால் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி அமைக்க வேண்டும்.

வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்து தமிழர்களுக்கு வாகனங்கள் வாங்க கடன் கொடுத்தும், வேலை வாய்ப்புகளை பெற்றும் இங்கு வசிப்பவர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இதையெல்லாம் காட்டுப்பய சார் இந்த காளி படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன், என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!