மணி ரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு எதிராக பிகார் மாநில போலீஸாரால் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மணி ரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து பிரதமர் மோடிக்குக் கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினார்கள்.
இந்நிலையில், பீகாரின் முசாஃபர்பூரில் மணி ரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் இவர்களுக்கு எதிராக முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பிரதமரின் செயல்திறனுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. அவர் அளித்த மனுவின் அடிப்படையில் 49 பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிபதி சூர்யகாந்த் திவாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து இந்தப் பிரபலங்கள் மீது முசாபர்பூரில் உள்ள சதார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது தேசத்துரோகம், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!