எத்தனை மொழி இருந்தாலும் தமிழ் மொழியை மறக்காத ஸ்ரீதேவி..!! வியப்பில் திரைப்பிரபலங்கள்..!!


ஹிந்தி திரையுலகிற்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றாலும், நடிகை ஸ்ரீதேவி தன் மூச்சு உள்ள வரை தமிழ் மீது மிகுந்த பற்றோடு வாழ்ந்து வந்தார். அண்மையில் மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்த போது ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ அல்லது மலையாளத்திலோ பதில் அளிக்காமல் சுத்தமான தமிழில் பேசி தமிழ் மீது தனக்குள்ள பற்றை வெளிப்படுத்தியது நெஞ்சை நெகிழச் செய்வதாக அமைந்துள்ளது.

தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி, ரிஷிகபூர் மற்றும் ராஜ்கபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.


பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பின், தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தமிழகத்தை விட்டு சென்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டாலும் அவருக்கு தமிழ் மீது அளவற்ற பற்று இருந்தது. அண்மையில் மலையாள சேனல் ஒற்றிற்கு பேட்டி அளித்தார். அதில் தான் 4 வயதில் நடிக்க வந்தேன் என்றும், தொடர்ந்து நான் நடிப்பதை எனது பெற்றோர்களே முடிவு செய்தனர்… பின்னர் நடிப்பு எனக்கு பிடித்துப் போனதால் தொடர்ந்து நடித்தாக குறிப்பிட்டார்.

வீட்டில் சாதாரணமாக இருக்கும் பெண் போன்ற கதாபாத்திரங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், கமல் , ரஜினி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தது தனது வாழ்நாளில் மறக்க முடியாதது என்றும் அந்த பேட்டியில் ஸ்ரீதேவி தெரிவித்தார்.


மலையாள நடிகர் மோகன்லாலின் நகைச்சுவை மிகுந்த அந்த நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஸ்ரீதேவி குறிப்பிட்டார். இந்த பேட்டி முழுவதும் அவர் தமிழிலேயே பேசினார்.

ஸ்ரீதேவிக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு. ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகள் தெரிந்தாலும், இந்த பேட்டியின்போது அவர் சுத்தமான தமிழில் பேசியது, தமிழ் மீது அவருக்கு இருந்த பற்றை வெளிப்படுத்தியது.

அதே நேரத்தில் ஹிந்தி தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டாலும், தொடர்ந்து அவர் தமிழ் மொழியிலேயே பேசி வந்துள்ளார்.

தனது குழந்தைகள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோருடன் ஸ்ரீதேவி பெரும்பாலும் தமிழிலேயே பேசியுள்ளார். இது தமிழ் மீது அவர் வைத்துள்ள பற்றையே காட்டுவதாக அமைந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி