வீரா – சினிமா விமர்சனம்


சுதந்திரம் பெறுவதற்கு முன்பு போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட மன்றங்கள், அதன்பின் ரவுடிகளின் கோட்டைகளாக மாறி உள்ளது. இந்த மன்றத்தின் தலைவருக்காக பல போட்டிகளும், சண்டைகளும் நிகழ்ந்து வருகிறது.

இப்படி தன் ஏரியாவில் உள்ள மனமகிழ் மன்றத்தின் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கிருஷ்ணா. இவருடைய நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து அதற்கான திட்டங்களை வகுக்கிறார். ஏரியாவில் உள்ள மற்றொரு ரவுடியும், ஏற்கெனவே மனமகிழ் மன்றத்தின் தலைவருமான கண்ணா ரவி இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதே ஏரியாவில் இருக்கும் தம்பி ராமையாவிடம் கிருஷ்ணாவும், கருணாவும் யோசனை கேட்கின்றனர். அவர்கள் இருவரையும் ஒரு காலகட்டத்தில் ஊரில் ரவுடிகளுக்கு திட்டங்களை வகுத்துக்கொடுப்பதில் கில்லாடியாக இருந்த முன்னாள் ரவுடியான ராதாரவியிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார் தம்பி ராமையா.


இருவரும் பயிற்சி பெற்று திரும்பியதும் ரவுடி கண்ணா ரவியை தீர்த்துக்கட்டிவிட்டு மன்றத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர திட்டம் வகுக்கிறார்கள். இதற்காக யாராவது ஒருவரை போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். இந்நிலையில், தங்களுக்கு பயிற்சி கொடுத்த ராதாரவியை கொல்ல நினைக்கிறார்கள்.

ஆனால், அவர் கொலை செய்யும் முன்பே இறந்து விடுகிறார். இவரை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறிக்கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார்கள். ஜெயிலில் சில ரவுடிகளிடம் சிக்குகிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? கிருஷ்ணா ஆசைப்பட்டதுபோல மன்றத் தலைவர் பொறுப்பு கிடைத்ததா? என்பது மீதிக்கதை.

துறுதுறுவென திரியும் வடசென்னை இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கிருஷ்ணா. அவருக்கே உரிய பாணியில் வழக்கம்போல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அர்ப்பணிப்பு தெரிகிறது. நடனம், காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட நடிப்பில் முதிர்ச்சி.

நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். தனக்கு நடக்க உள்ள திருமணத்தை நிறுத்த அரங்கேற்றும் சின்னச் சின்ன அம்சங்கள் ரசிக்க வைக்கிறது. இவருடைய கதாபத்திரத்தை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.


அதுபோல், கருணாகரன், யோகி பாபு, சரண் தீப், ராதா ரவி, தம்பி ராமையா ஆகியோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அனைவரும் மனதில் நிற்கிறார்கள். குறிப்பாக பெரிய ரவுடியிடம் போனில் பேசும் காட்சியில் அசரவைக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

வடசென்னையை மையமாகக் கொண்டு ஏற்கெனவே வந்த பல ரவுடி கதையம்சம் கொண்ட படங்கள் வெளியானாலும், இப்படத்தை காட்சி படுத்திய விதமும் திரைக்கதையிலும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் இயக்குனர் ராஜா ராமன். கிருஷ்ணாவும், கருணாவும் தொழில் கற்றுக்கொள்ளச் செல்லும் இடத்தில் இருந்து படம் சூடுபிடிக்கிறது. சில திருப்பங்களும், சில சுவாரசியமான கதாபாத்திர வார்ப்புகளும் இரண்டாம் பாதியின் ஒரு கட்டம் வரை படத்தை வேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். ரவுடிக்கு பின்னால் இன்னொரு ரவுடி, அரசியல் புள்ளிகள் உருவாவது, அவர்களை வீழ்த்த இன்னொரு கும்பல் உருவெடுப்பது என்று ரவுடி சாம்ராஜ்ஜியத்தை திரைக்கதையில் பின்னிய விதம் சிறப்பு. கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் சிறப்பு.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குமரன் – விக்னேஷ் ஒளிப்பதிவு கதைக் களத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘வீரா’ வீரமானவன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!