என்னிடம் இல்லாத ஒன்றை சித்திக் கொடுத்தார்.. சூர்யா உருக்கம்

பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், ‘சாது மிரண்டா’, ‘காவலன்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வந்த இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “என் இதயம் கனக்கிறது. சித்திக் சாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் நான் நிற்கிறேன்.

‘பிரண்ட்ஸ்’ திரைப்படம் எனக்கு பல வழிகளில் முக்கியமான திரைப்படம். படப்பிடிப்பின் போது நடிப்பில் சிறிய முன்னேற்றம் செய்தாலும் நடிகர்களைப் பாராட்டுவார். படப்பிடிப்பைத் தாண்டி எடிட் செய்யும் போதும், எனது நடிப்பு குறித்த தனது கருத்துகளை அன்புடன் தெரிவிப்பார்.

‘பிரண்ட்ஸ்’ படம் பண்ணும்போது அவர் புகழ்பெற்ற மூத்த இயக்குனர். ஆனால் அவர் தனது நட்பு அணுகுமுறையால் படப்பிடிப்பின் போது அனைவரையும் சமமாக நடத்துவார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ குரலை உயர்த்தியோ நான் எப்போதும் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் நான் விரும்பும் அனுபவம். நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பே என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். என்னையும் என் திறமையையும் நம்புவதற்கான உள்நம்பிக்கையை அவர் கொடுத்தார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் என் குடும்பத்தை பற்றி விசாரிப்பார்.

நடிகராக நான் உருவாகும் ஆண்டுகளில் என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி சார். நான் உங்களை மிஸ் செய்கிறேன். நீங்கள் கொடுத்த அன்பும் உங்கள் நினைவுகளும் எங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!