தமிழ்நாட்டு மக்கள் போல் முட்டாள்கள் வேறெங்கும் கிடையாது- நடிகர் ராதாரவி பேச்சு

நகைச்சுவை நடிகரான டேனியல் ஆனி போப் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற டேனியல் ஆனி போப் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

நடிகர் டேனியல் ஆனி போப் சமீபத்தில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோ (DANI’S THEATRE STUDIO) என்னும் நடிப்புப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தார். இந்த நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதாரவி, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனிஸ் பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினரான ராதாரவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசியதாவது, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன், நான் உள்ளதை சொல்வது உங்களுக்கு ஏடாகூடமாகத் தெரிகிறது. “டேய் நீ என்ன நல்லவனா..?” என்று கேட்டார் ராதாரவின்னு போட்டுவிடுவார்கள். ஏனென்றால் அப்படிப் போட்டால் தான் ஆடியன்ஸ் அதை க்ளிக் செய்து பார்க்கிறார்கள். அதை க்ளிக் செய்துவிட்டால் இவர்களுக்கு காசு. அதனால் இது போன்று வசீகரமான தலைப்பு வைத்து வரும் எந்த வீடியோக்களையும் நான் பார்ப்பது இல்லை.

நீங்கள் எல்லாம் இது போன்ற சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். இவர்களில் யாராவது எதிர்காலத்தில் ஒரு புரட்சித் தலைவரோ, நடிகர் திலகமோ இல்லை காதல் மன்னனாகவோ வரலாம். எல்லோரும் பெரிய பெரிய நிகழ்வுகளுக்குத் தான் வருவோம் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. ஒரு நாள் பெரிய இடம் சின்ன இடமாக மாறும், சின்ன இடம் பெரிய இடமாக மாறும். இதுதான் வாழ்க்கை. மேடையில் அமர்ந்திருக்கும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் அவர்களுக்கும் வணக்கம். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், அவர் இயக்கவிருக்கும் ஒர் வெப் சீரிஸ் ஒன்றில் என்னை நடிக்க வைக்கலாம் என்று நினைத்ததாகவும், பின்னர் சிலர் வேறு மாதிரி சொன்னதால் அதற்கான முயற்சி எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் பிரபாகரனிடம் இனி நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீயே என் வீட்டுக்கு வந்துவிடு, நான் பத்து இலட்சம் கேட்பேன், நீ முடியாது ஒரு இலட்சம் தான் கொடுக்க முடியும் என்று கூறு, எதுவாக இருந்தாலும் நாமே பேசிக் கொள்வோம். அப்பொழுது தான் நான் என்ன பேசுகிறேன் என்பதாவது உனக்குத் தெரியும் என்றேன்.

ராதாரவி என்றால் கெட்ட வார்த்தையில் பேசுவார் என்று ஒரு கருத்து பரவுகிறது. நான் கெட்ட வார்த்தையில் பேசக் கூடாது என்கிற திடகாத்திரமான முடிவோடு தான் வந்தேன். கோபம் வந்தால் எதைப் பற்றியும் பயப்படமாட்டேன், எனக்கு தோன்றியதைப் பேசிவிடுவேன். ஆனால் இங்கு நான் கோபப்படும் படி எதுவுமே இல்லை. இந்த நடிகர்களுக்கு அவர்களின் நிலை உயர்ந்துவிட்டால் எங்கிருந்து தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருமோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேசும் அந்தப் பேச்சையும் கைதட்டி ரசிக்கத் தானே செய்கிறார்கள் மக்கள். தமிழ்நாட்டு மக்கள் போல் முட்டாள்கள் வேறெங்கும் கிடையாது. இதை தைரியமாகத் தான் சொல்கிறேன். வேண்டுமென்றால் என் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள். என்னைச் சார்ந்து படங்கள் எடுக்கப்படுவதில்லை. ஹீரோவைச் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் நான் இருக்கிறேன். நீங்கள் என்னை உதாசீனப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் ஹீரோக்களை உதாசீனப்படுத்த வேண்டும். இன்றும் நான் 5 படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒருவர் கேட்டார் ஏன் படங்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது என்று. நான் இதாவது இருக்கிறதே என்று கூறினேன்.

இன்று டேனியல் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றால், பல சிரமங்களுக்கு இடையில் தான் இதை நடத்துகிறார். இந்த சிரமங்களுக்கு இடையிலும் அவர் சிரிப்பது தான் அவருக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கும். இன்னும் ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார் என்பதை ஒரு சவாலாகவே இங்கே கூறிக் கொள்கிறேன். டேனியல் தொடங்கியிருக்கும் பள்ளி சிறப்பாக செயல்பட ஏதேனும் ஆலோசனை கொடுங்கள். நானும் கண்டிப்பாக அவனுக்கு ஆலோசனை கொடுப்பேன். உன் கைக்காசைப் போட்டு அதிகம் செலவு செய்யாதே என்று கூறுவேன். ஏனென்றால் நாளைக்கி இதிலிருந்து வரும் ஒரு மாணவனே பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றால், பழையதை மனதில் வைத்து நடந்து கொள்வார் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் சினிமாவின் வியாதி அது. டேனியல் நீ சோர்ந்து போகும் போது எனக்கு போன் செய். நான் எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வருவேன். நான் உன்னை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்வேன். உன் வளர்ச்சிக்கு உதவ நிறைய நண்பர்கள் உன்னோடு இருக்கிறார்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். யாரும் தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள். அவர்கள் உங்களோடு இருப்பது தான் உங்களுக்கு ஆசிர்வாதம். குழந்தைகளை சுதந்திரமாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் வளருங்கள். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!