ராயர் பரம்பரை – விமர்சனம்

நாயகன் கிருஷ்ணா, காதலர்களுக்கு எதிரான சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். இந்த சங்கத்திற்கு தலைவராக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார். இவர்கள் காதலிப்பவர்களை கண்டால் அவர்களை பிரித்து விடுகிறார்கள். அதே ஊரில் தாதாவாக இருக்கிறார் ஆனந்த்ராஜ். இவர் தன் மகள் சரண்யாவிற்கு தான் பார்க்கும் இளைஞனைத் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், ஜோசியக்காரர் மனோபாலா, உங்களது பெண்ணிற்கு நிச்சயம் காதல் திருமணம் தான் நடக்கும் என்று கூறுகிறார்.

அதனால், தனது மகளை யாரும் காதலிக்காதவாறு பார்த்து வருகிறார். கிருஷ்ணாவும் சரண்யாவும் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்ட விஷயம் மொட்டை ராஜேந்திரனுக்கு தெரிய வருகிறது. இறுதியில் சண்டை போட்டு வந்த கிருஷ்ணாவும் சரண்யாவும் எப்படி திருமணம் செய்து கொண்டார்கள்? ஆனந்த்ராஜ் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கிருஷ்ணா, காமெடி காட்சிகளில் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் ரசிக்கும் படி நடித்து இருக்கிறார். நாயகியாக வரும் சரண்யா, அழகாக வந்து கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் இருவரும் காமெடி செய்து திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். ஆனால், சில இடங்களில் பெரியதாக எடுபடவில்லை.  

காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராம்நாத். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் கொஞ்சம் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கலாம். திறமையான நடிகர்களை வைத்து வேலை வாங்க தவறி இருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசையில் 2 பாடல்களை ரசிக்கலாம். விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் ராயர் பரம்பரை – விறுவிறுப்பு குறைவு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!