இயக்கத்திற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் சசிகுமார்

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சசிகுமாரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் ‘ஈசன்’ திரைப்படத்தை இயக்கி மற்றுமொரு வெற்றியை கொடுத்தார்.

பின்னர், இயக்கத்திற்கு சிறுது இடைவெளிவிட்ட சசிகுமார் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில், ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சசிகுமார் தான் மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது. சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. நீங்கள் இந்த படத்தை கொண்டாடினீர்கள். இந்த முக்கியமான நாளில் நான் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளேன் என்பதை தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!