விஜய் குறித்த கேள்வியால் கடுப்பான சரத்குமார்.. பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு ‘போர் தொழில்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. ‘போர் தொழில்’ திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமாரிடம், “விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது” இதற்கு பதிலளித்த சரத்குமார், அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் கூறுகிறோம். விஜய் என்னோடு கூட்டணி வைக்க வேண்டும். நீங்கள் ஏன் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். முதலில் விஜய் அரசியல் களத்திற்கு வரவேண்டும் அதை வரவேற்கிறோம் என்று பேசிவிட்டோம் என்று கோபமாக பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் விவாதம் செய்த சரத்குமார் வாங்க மேடையில் போய் பேசுவோம் என்று மீண்டும் மேடைக்கே சென்றுவிட்டார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!