மாமன்னன் பட விவகாரம்.. உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் ‘மாமன்னன்’ வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க நடிகைகள் ஆனந்தி, பாயல் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் “ஏஞ்சல்” என்ற படத்தை தயாரித்து வருவதாகவும், 2018ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கிறார்.

இதனை தனது கடைசி படம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் “ஏஞ்சல்” படத்தை முடிக்காமல் “மாமன்னன்” படத்தை வெளியிட அனுமதித்தால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தரவேண்டும் என்றும் ரூ.25 கோடி இழப்பீடி தரவேண்டும் என்றும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதற்குள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!