ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை.. கணவர் மீது நடிகை ரக்ஷிதா பரபரப்பு புகார்

தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போதுதான் இவர் கணவர் தினேஷிடம் இருந்து பிரிந்து வாழ்வது தெரிய வந்தது. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தான் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக தினேஷ் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக கூறியுள்ளார். மேலும், தனது செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரக்ஷிதா வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இருவரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!