ஆஞ்சநேயருக்கு திரையரங்கில் ஒரு காலி இருக்கை – ‘ஆதிபுருஷ்’ படக்குழு நூதன அறிவிப்பு

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரபாஸ், சைப் அலி கான், நடிகை கீர்த்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூன் 16ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லர் வெளியான 16 மணி நேரத்தில் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனிடையே ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் திரையிடப்படும் அனைத்து திரை அரங்குகளிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்கு ஒதுக்க வேண்டும் என படக்குழு தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகிறது.

அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் “ராமாயணம் எங்கெல்லாம் ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் தோன்றுவதாக நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையை மதிக்கும் விதமாக ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் திரையிடும் திரைஅரங்குளில் அனைத்து காட்சிகளிலும் ஆஞ்சநேயருக்கு ஒரு இருக்கை ஒதுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சிலர் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!