லியோ படத்தில் நான் நடிக்கிறேனா? விளக்கம் அளித்த விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரத்னகுமார், காஷ்மீரில் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பின் போது கையில் உடைந்த கண்ணாடியின் ஒரு பகுதியை வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த கண்ணாடி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்திருந்த கண்ணாடியின் ஒரு பகுதி என்பதால் லியோ படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதை ரத்னகுமார் மறைமுகமாக பதிவு செய்திருப்பதாக பலரும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி இது குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அதில், நான் லியோ’ படத்தில் நடிக்கவில்லை, தயவு கூர்ந்து இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அந்த கண்ணாடியை ரத்னகுமார் எதற்காக பதிவிட்டிருந்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் விளையாட்டாக செய்திருப்பார். ரசிகர்கள் போடும் மனக்கணக்கிற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இது போன்ற செய்திகளை பெரிய செய்தி நிறுவனங்களும் வெளியிடுகின்றன. அவர்களால் எங்களை அணுகி எளிதில் தெளிவு படுத்திக் கொள்ள முடியும், ஆனால் இது போன்ற நம்பகத்தன்மையற்ற செய்திகளால் மக்களும் நம்ப ஆரம்பித்து விடுகின்றனர் என்று விஜய் சேதுபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!