ருத்ரன் – விமர்சனம்

வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞனான ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கரை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இதனால் தன் நண்பரின் உதவியுடன் பிரியா பவானி சங்கரிடம் காதலை கூறி இருவரும் காதலித்து வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் தந்தை நாசர் ஒரு டிராவல்ஸ் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். ரூ.6 கோடி கடன் வாங்கி கம்பெனியை வளர்க்க நினைக்கும் போது நாசரின் நண்பர் அந்த பணத்தை எடுத்து தலைமறைவாகிவிடுகிறார்.

இதனால் கடன் சுமையில் சிக்கிய நாசர் வருத்தம் தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிடுகிறார். கடனை எல்லாம் நான்தான் அடைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் ராகவா லாரன்ஸ் வெளிநாடு சென்று கடனை அடைத்துவிடலாம் என்ற முடிவை எடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ராகவா லாரன்ஸ் தலைமறைவாக இருந்து சரத்குமாரின் அடியாட்கள் ஒவ்வொருவரையும் கொன்று வருகிறார். இறுதியில், ராகவா லாரன்ஸ் ஏன் தலைமறைவாக இருக்கிறார்..? சரத்குமாரை ராகவா லாரன்ஸ் பழிவாங்குவதற்கான பின்னணி என்ன..? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் எந்த ஒரு புதுமையும் இல்லை. இதற்கு முன்பு நடித்த படங்களின் சாயல் இந்த படத்தில் தோன்றுகிறது. சண்டைக்காட்சிகளில் பழங்கால தெலுங்கு சினிமாக்களுக்கே டஃப் கொடுக்கிறார். பிரியா பவானி சங்கரின் காதல் காட்சிகள் நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குனர் அவர் தலைமுறையில் உள்ள கதையை அப்படியே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கொடுத்திருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் முழுவதும் ரத்தம், அடிதடி என ஒரே நேர்கோட்டில் திரைக்கதை அமைந்துள்ளது சலிப்பை ஏற்படுத்துகிறது. சாம் சி.எஸ் பின்னணி இசையில் உள்ள இரைச்சலை தவிர்த்திருக்கலாம். பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஆர்.டி.ராஜசேகர் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார். மொத்தத்தில் ருத்ரன் – வலுவற்ற திரைக்கதை


https://youtube.com/watch?v=FYRrB6S1e4o
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!