95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா: தனது வாக்கை செலுத்திய நடிகர் சூர்யா

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு, 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 12-ந்தேதி நடைபெறுகிறது.

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் உள்ள படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களித்து, அதில் அதிக அளவு வாக்குகளை பெறும் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 4,000-க்கும் அதிகமான ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் சூர்யா ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் ஆஸ்கர் கமிட்டி உறுப்பினராக தனது வாக்கினை நடிகர் சூர்யா இன்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!