எந்த உலகில் இது அனுமதிக்கப்படுகிறது..? புகைப்படம் வெளியானது குறித்து ஆலியா பட் ஆவேசம்..

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் கங்குபாய் கத்தியவாடி, ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஆலியா பட் மும்பையில் உள்ள தனது வீட்டின் ஓய்வு அறையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆலியாபட் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நான் எனது வீட்டில் மதியம் நேரத்தில் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னை கண்காணிப்பதாக உணர்ந்தேன். நிமர்ந்து பார்த்தபோது எனது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்த இரு ஆண்கள் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தேன். எந்த உலகில் இது அனுமதிக்கப்படுகிறது? இது தனி நபர் மீதான அத்துமீறல்” என்று மும்பை போலீசை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆலியா பட்டுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆலியா பட்டின் பதிவினை குறிப்பிட்டு நடிகை அனுஷ்கா சர்மா, “இவர்கள் இவ்வாறு செய்வது முதல்முறை அல்ல. இரண்டு வருடத்திற்கு முன்னர் நாங்களும் இது தொடர்பாக பேசினோம். இம்மாதிரியான செயல்கள் அவர்களுக்கு மரியாதை அளித்திருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இது முற்றிலும் அவமானமானது. நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் எங்கள் மகளின் படத்தை வெளியிட்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.


https://youtube.com/watch?v=s0zf7xpHK2o
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!