நடிப்பு பசி செத்துவிட்டால் சினிமாவை விட்டு போய்விட வேண்டும் – நடிகர் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “கஷ்டப்பட்டுத்தான் நடிக்க வேண்டும். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் அந்த படத்துக்கு 100 சதவீதம் நியாயம் செய்ய வேண்டும். கஷ்டத்தை பார்த்து வருந்தக்கூடாது.

கொடுத்த காட்சியில் நடித்தே ஆக வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சினிமாவில் இருக்க அருகதை உண்டு. நடிப்பில் புகழ், பெயர் சும்மா வராது. கஷ்டப்பட வேண்டும். கதாபாத்திரங்களுக்காக நடிகர்கள் பசியோடு இருக்க வேண்டும். நடிப்பு பசி செத்து விட்டால் சினிமாவை விட்டே போய் விடவேண்டும். நான் கஷ்டமான காட்சிகளிலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மாடுபோல் உழைப்பேன். திரையில் என்னை பார்க்கும் ரசிகர்கள் கைதட்டலில் கஷ்டப்பட்டது மறைந்துவிடும்” என்று கூறினார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!