ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

கிராமத்தில் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும் – இந்துமதிக்கும் பிறக்கும் குழந்தை தான் சந்தானம் (கண்ணாயிரம்). இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தினால், சிறு வயதில் இருந்தே சந்தானமும், அவரது தாயும் பல அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். முதல் மனைவி மற்றும் அவரது மகன்களும் சந்தானத்தையும் அவரது தாயையும் அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
 
நகரில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக இருக்கும் சந்தானம், தன் பத்திரிகையாளர் நண்பனின் உதவியால் சில குற்றங்களை கண்டுபிடிக்கிறார். சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் இவர் பெரிய டிடெக்டிவாக மாற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். 
 
இதனிடையில் தன்னுடைய தாயின் மரண செய்தி அறிந்து ஊருக்கு கிளம்புகிறார். ஊருக்கு செல்வதற்குள் அவருடைய தாயின் இறுதி சடங்கை சந்தானம் இல்லாமல் செய்து முடித்து விடுகின்றனர். அதன்பின்னர் தந்தை ஜாமின்தாரின் சொத்தில் இரண்டாம் மனைவிக்கும் பங்கு இருப்பதால், இவரும் அதற்காக அந்த கிராமத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அச்சமயம் அந்த கிராமத்தில் திடீர் திடீர் என்று பல மரணங்கள் நடக்கிறது. இங்கு தங்கியிருக்கும் நாட்களில் இதனை கண்டுபிடிக்க சந்தானம் ஆரம்பிக்கிறார். இந்த கேஸை கையில் எடுத்து துப்பறியும் சந்தனத்தை திசைதிருப்பி விட எதிரிகளும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதனால் எதிரியின் வலையில் சிக்கும் சந்தானம், அதிலிருந்து மீண்டு வந்தாரா? இந்த மரணங்களுக்கான காரணம் யார்? மர்ம மரணங்களை சந்தானம் எப்படி கண்டு பிடிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை

ஏஜென்ட் கண்ணாயிரமாக வரும் சந்தானம் அவரின் நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடிக்கிறார். படத்திற்கு சந்தானம் சிறந்த தேர்வு. அவரின் நகைச்சுவையான நடிப்பும் இயல்பான வசனங்களும் கதைக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கதாநாயகியாக வரும் ரியாவின் நடிப்பு சிறப்பு. குக்வித் கோமாளி புகழின் கதாப்பாத்திரம் கவனிக்கும் படி இல்லை. சந்தானத்தின் பெற்றோர்களாக வரும் இந்துமதி மற்றும் குரு சமோசுந்தரம் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர். முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா ஆகியோர் படத்தின் நீரோட்டத்தில் பயணிக்கின்றனர்.
 
தெலுங்கில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஏஜென்ட் ஸ்ரீவத்சவா படத்தை ரீமேக் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், பெரியளவில் ரசிகர்களுக்கு பூர்த்தி செய்யவில்லை. கதாநாயகர்கள் தேர்வும் படத்தின் நீரோட்டமும் சரியாக இருந்தாலும் எதோ ஒன்று படத்தில் இருந்து விலக வைக்கிறது. படத்தின் காட்சி ஓட்டதையும் விறுவிறுப்பையும் கூட்டியிருந்தாலும் இயக்குனர் மனோஜ் பீதாவுக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கும். டிடெக்டிவ் படங்களுக்கு உரிய விறுவிறுப்பும், சுவாரசியமும் படத்தில் இல்லை. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், தனது பணியை கச்சிதமாக செய்து முடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கலாம். மொத்தத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் – விறுவிறுப்பு குறைவு.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!