தாய்-தந்தையர்க்கு சிலை எழுப்பிய ரஜினி.. நினைவு மண்டபம் கட்டவும் திட்டம்

ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருக்கும் பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி வந்ததில்லை. ரஜினி 2008ம் ஆண்டில் ரசிகர்களை சந்தித்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பில் கவனிக்க வைத்த விஷயம் கடமையைச்செய் பலனை எதிர்பார் என்ற வாசகம்.

அதோடு ரசிகர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என்று ரஜினி உத்தர விட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் நீங்கள் பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் உங்கள் தாய் தந்தையர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா? என்று வாசிக்கப்பட்டது. அப்போது ரஜினியின் முகத்தில் ஏற்பட்ட பிரகாச ஓளி அவரது மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அந்த ரசிகர் யார் என்று ரஜினி கேட்க, கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்று அந்த ரசிகர் எழுந்து நின்றார். அவர் மீது தனி பாசம் கொண்ட ரஜினி தன்னை வீட்டில் வந்து பார்க்கும்படி கூறினார். மறுநாள் வீட்டில் சந்தித்தவரிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ஊர் நிலவரம், நாச்சிக் குப்பத்தின் தற்போதைய சூழல் எல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டவர் கார்த்திகேயனுக்கு கிருஷ்ணகிரி மன்றத்தில் முக்கிய பொறுப்பும் கொடுத்து அழகு பார்த்தார்.

கார்த்திகேயன் கேள்வி எழுப்பிய பிறகு நாச்சிக் குப்பத்தின் மீது ரஜினியின் பார்வை விழுந்தது. அங்கு தன்னுடைய அம்மா ரமாபாய், தந்தை ராமோஜி ராவ் பிறந்த வீட்டின் தற்போதைய சூழல் எல்லா வற்றையும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டே இருந்திருக்கிறார். தனது அண்ணன் சத்யநாராயணாவை நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு அனுப்பி பார்க்க வைத்தார் ரஜினி. அங்கு ரஜினியின் மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோர் பூர்வீக வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.

அந்த வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ரஜினிக்கு சொந்தமான ஒரு தோட்டம் போன்ற இடம் அமைந்திருக்கிறது. அங்கு முதல் கட்டமாக வேலி அமைத்து ஒரு தண்ணீர் தொட்டியை அமைக்க உத்தரவிட்டார். வயல், விவசாயம் வேலைகளை மட்டுமே நம்பி இருக்கும் அந்த கிராமத்தின் தண்ணீர் தேவையை போக்க தண்ணீர் தொட்டியும் அங்கேயே கால்நடைகள் தண்ணீர் அருந்தும்படியான வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த வசதியால் அந்தப் பகுதியில் இருந்தவர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகியிருக்கிறது. தான் பிறந்த கிராமத்தை நினைவுபடுத்திய கிருஷ்ணகிரி கார்த்திகேயனிடமே இடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் கொடுத்தார் ரஜினி. இது நடந்து பல ஆண்டுகள் ஆகின. பிறகு சில வாரங்களுக்கு முன்பு தாய் தந்தையர்க்கு சிலை அமைக்கும் பணிக்காக இடம் தூய்மை செய்யப்பட்டு பணிகள் நடந்தன.

தோட்டத்துப் பகுதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஓடு வேய்ந்த சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டது. இதன் மீது ஒரு பீடம் கட்டப்பட்டு அதில் பெற்றோரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு, அங்கு நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடக்க இருப்பதாகக் கூறுப்படுகிறது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!