ஆற்றல் – விமர்சனம்

நகரில் உள்ள பணக்காரர்கள் வீடுகளை நோட்டம் விட்டு, பணம் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பின், வீட்டில் உள்ளவர்களை கொலை செய்கிறார்கள். இந்த கொலை-கொள்ளைகளை பற்றி போலீஸ் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மெக்கானிக் சார்லியும் அந்த கொலைகார கொள்ளையர்களிடம் சிக்குகிறார். மகன் விதார்த்தின் கனவு திட்டத்தை நிறைவேற்ற பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி வரும் வழியில், அந்த பணத்துக்காக அவரை கொள்ளையர்கள் கொலை செய்துவிடுகின்றனர். அப்பாவின் மரணம் மகன் விதார்த்தை பாதிக்கிறது. தன் அப்பாவை கொலை செய்த கொள்ளையர்களை பழி வாங்குவேன் என்று விதார்த் சபதம் எடுக்கிறார். அவருடைய சபதம் நிறைவேறியதா? அவரின் கனவு திட்டத்தை விதார்த் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அதிரடி நாயகனாக வரும் விதார்த் அவரின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். கொலை செய்யப்பட்ட அப்பா சார்லியை மடியில் போட்டுக்கொண்டு கதறும் காட்சியில், பார்வையாளர்களை கண் கலங்க வைக்கிறார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டி, ரசிக்க வைக்கிறார். இவரின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷிரிதாராவ், அவரின் முகவசீகரத்தால் அனைவரின் கவனம் ஈர்க்கிறார். சார்லி மகன் மீது பாசமழை பொழியும் சீன்களில், நெகிழவைக்கிறார். கொள்ளையர்களின் தலைவனாக வம்சி கிருஷ்ணா வழக்கம்போல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

அதிரடி திகில் படமாக கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் கே.எல்.கண்ணன். கொலை-கொள்ளை காட்சிகளில் சற்று விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். புதுவிதமான கனவை பார்வையாளர்களுக்கு கடத்த நினைத்து பாராட்டுக்களை பெறுகிறார்.

இருந்தும் உயர்தர கனவை நனவாக்கும் முயற்சியை மிகவும் சாதரணமாக காட்சிப்படுத்தி அலுப்பை ஏற்படுத்தியிருக்கிறார். உதாரணத்திற்கு படத்தின் ஒரு இடத்தில் அவர் கண்டுபிடிக்கும் புதுவிதமான காரை வழிநடத்தும் கையில் கட்டியிருக்கும் மணிக்கட்டை மிகவும் சாதராணதாக கையில் கட்டி பார்வையாளர்களை சோர்வடைய செய்திருக்கிறார்.

அஸ்வின் ஹேமந்த் இசையில், பாடல்கள் எடுபடவில்லை. கொள்ளைகளும், கொலைகளும் நடைபெறும் இரவு நேரங்களை ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் திகிலாக பதிவு செய்து இருக்கிறார். மொத்தத்தில் ஆற்றல் – கவனம் தேவை.  




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!