தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? – வைரமுத்து பதிவு

ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

சமீபத்தில் ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதில்,

“எங்களை ஆண்ட
இஸ்லாமியரோ தெலுங்கரோ
மராட்டியரோ வெள்ளையரோ
தங்கள் தாய் மொழியை
எங்கள் தலையில் திணித்ததில்லை.

தமிழ்நாட்டைத்
தமிழர்கள் ஆளும்பொழுதே
இந்தியைத் திணிப்பது
என்ன நியாயம்?

அதிகாரமிக்கவர்களே
அன்போடு சொல்கிறேன்.
புலியைத் தொட்டாலும் தொடுக
மொழியைத் தொடாது விடுக” என குறிப்பிட்டுள்ளார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!