பாரதிராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று பார்த்தனர்.

இதையடுத்து பாரதிராஜா நேற்று (09-09-2022) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து நேரில் சென்று நலம் விசாரித்தனர். அண்மையில் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!