‘பொன்னியின் செல்வன்’ பட பாடகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. அதன்பின்னர் எந்திரன் 2.0 படத்தில் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தில் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தில் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் “எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடல் மிக பிரபலம் ஆனது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார். இவரது திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.