23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் வாரிசு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஜய் தனது குடும்பத்துக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு எப்படி முறியடிக்கிறார் என்ற கதையம்சத்தில் படம் தயாராவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விஜய்யின் தந்தையாக சரத்குமாரும் சகோதரராக ஷ்யாமும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் குஷ்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1999-இல் வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாரிசு படத்தில் குஷ்பு நடிக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

விஜய்யின் பிறந்தநாள் அன்று விஜய்யுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் வாரிசு படத்தில் குஷ்பு நடிப்பதை உறுதிப்படுத்துவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!