சூரரைப் போற்று படத்தில் மீண்டும் சூர்யா

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். ‘சூரரைப் போற்று’ சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.


கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார். விக்ரம் படத்தில் இவரின் கதாப்பாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சூர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அக்‌ஷய்குமார் மடியில் சூர்யா சாய்ந்து கிடக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சூர்யா எந்த கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி, படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!