7 வருட இடைவேளை.. மீண்டும் படத்தை துவங்கும் பிரபல இயக்குனர்

பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய “புத்தம் புது காலை விடியாதா” என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “லோனர்ஸ்” அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.


இதனிடையே இவர் இயக்கத்தில் தயாரான மின்மினி திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது. இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015 ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார்.

மின்மினி படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்ள ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மேலும், இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ஆங்கர் பே ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை ஹலிதா ஷமீம் மீண்டும் தொடங்கியுள்ளார். இவர் இப்படத்திற்காக எடுத்துக்கொண்ட புது முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!