பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. பாதுகாப்பை அதிகரித்த போலீஸ்

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான் கான். சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்திப்பட நடிகர் சல்மான் கான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான அவரது தந்தை சலீம் கானுக்கு நேற்று கொலை மிரட்டல் கடிதம் வந்ததாக மும்பை போலீசார் தெரிவித்து இருந்தனர்.

சல்மான்கான் தன்னுடைய குடும்பத்துடன் பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று காலை சல்மான் கானின் தந்தை சலீம்கான் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற போது, அவர் வழக்கம் போல் அமரும் இடத்தில் ஒரு கடிதம் இருந்துள்ளது.

அந்த கடிதத்தை பிரித்து படித்த போது அதில் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று சல்மான் கான், மற்றும் அவரது தந்தை சலீம் கான் கடிதத்துடன் பாந்திரா போலீஸ் நிலையம் வந்தனர். தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கடிதத்தை போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு வந்த மிரட்டல் கடிதத்தை அடுத்து அவரின் பாதுகாப்பை மகாராஷ்டிராவின் உள்துறை இன்று மேலும் பலப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் குற்றப்பிரிவு குழு நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வந்து சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!