‘கே.ஜி.எஃப்’ படக்குழுவுடன் இணைந்த சுதா கொங்கரா

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுதா கொங்கரா, ‘கே.ஜி.எஃப்’ படக்குழுவுடன் இணைந்துள்ளார்.


இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.

இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக சுதா உயர்ந்தார். இந்நிலையில், சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் வசூல் சாதனையும் நல்ல வரவேற்பையும் பெற்ற ‘கே.ஜி.எஃப்’ படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். 


இது குறித்த அறிவிப்பை அந்த நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. இப்படம் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கேப்டன் கோபிநாத் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். தற்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பும் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!