நடிகர் திலீப்புடன் தொடர்பில் இருந்த நடிகையிடம் விசாரிக்க முடிவு

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்புடன் தொடர்பில் இருந்த நடிகையிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

 இது தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திலீப், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.

 இது தொடர்பாக போலீசார் நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போன்களை கைப்பற்றி அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார், அவர்களுடன் என்ன பேசினார்? என்பதை கண்டறிய முயற்சி மேற்கொண்டனர்.


நடிகர் திலீப்பின் செல்போன்களை ஆய்வு செய்த போது அவர் சிலருடன் பேசியதை அழித்திருப்பது தெரியவந்தது. அந்த நபர்கள் யார்? என்பதை சைபர் கிரைம் போலீசார் மற்றும் செல்போன் நிறுவன துணையுடன் போலீசார் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

 இதில் நடிகர் திலீப்பும், பிரபல நடிகை ஒருவரும் அடிக்கடி செல்போனில் பேசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அந்த நடிகை துபாயில் இருப்பதாக தெரிகிறது. அவரிடமும் விசாரிக்க கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த நடிகை துபாயில் இருப்பதால் அவரிடம் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதி பெற்று நடிகையிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!