நடிகர் எஸ்.வி.சேகர் போலீசில் ஆஜர்

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராகினார்.

நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ‘முகநூல்’ பக்கத்தில் அவதூறு தகவல் பதிவிட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், அமெரிக்கவாழ் தமிழர் முகநூலில் பதிவிட்டிருந்த கருத்தையே பகிர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு எஸ்.வி.சேகர் ஏப்ரல் 2-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராகி, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்கவாழ் தமிழர் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும்’ என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

அதன்பேரில், எஸ்.வி.சேகர் தனது வக்கீல் வெங்கடேஷ் மகாதேவனுடன் சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் முன்பு நேற்று ஆஜராகினார். ‘முகநூல்’ பதிவு தொடர்பாக அரை மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். விசாரணை முடிந்து வெளியே வந்த எஸ்.வி.சேகரிடம், விசாரணை குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, ‘நான் இன்றைக்கு மவுன விரதம்’ என்று நகைச்சுவையாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!