தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் – ஆஸ்கர் விழாவில் பரபரப்பு

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது. 

ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். 


இந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். 


இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு” என்று கூச்சலிட்டார்.


நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்கர் விழா மேடையில் வன்முறை நடப்பது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், ஆஸ்கார் விழாவில் பிங்கட் ஸ்மித் பற்றி ராக் கேலி செய்வது இது முதல் முறை அல்ல என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டி சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!