விமர்சனங்களுக்கு பதிலளித்த வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.


சூதுகவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அசோக் செல்வன். இவரின் அடுத்த படத்தை சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மன்மதலீலை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையில் தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இத்திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சமூக வலைதளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன்மத லீலை படம் ஏன் எடுத்தேன் என இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

மன்மதலீலை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் பேசிய வெங்கட் பிரபு, “லாக் டவுண் சமயத்தில்தான் இந்த மாதிரி ஒரு படம் பண்ணலாம் என்று முடிவெடுத்தோம். அந்த சமயத்தில் சீரியசான படங்கள் நிறைய வந்துகொண்டிருந்தது. நெருக்கமானவர்கள் நிறைய பேரை நாம் இழந்து கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட சூழலில் சோகமான படத்தை நாமும் எடுக்க வெண்டாம் என்று முடிவு செய்து மன்மத லீலை படத்தை ஆரம்பித்தோம். இப்படத்தின் கதை என் உதவி இயக்குனர் மணிவண்ணன் எழுதியது.


இந்தப் படத்தை சமூக வலைதளங்களில் நிறைய பேர் விமர்சித்திருந்தனர். அடல்ட் காமெடி என்ற ஜானரில் நிறைய படங்கள் வராததே இதற்கு காரணம் என நினைக்கிறேன். அடல்ட் காமெடி என்றாலே முகம் சுழிக்கும் வகையிலான காமெடி என்று நினைக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே அடல்ட் காமெடி ஜானரில் பாக்யராஜ் சார் படம் பண்ணியிருக்கிறார். நான் மன்மத லீலை படம் பண்ணுவதற்கு அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

இலைமறை காயாய் அவர் பண்ணியதை நான் இந்தக் காலத்திற்கு ஏற்ற மாதிரி பண்ணியிருக்கிறேன். அமெரிக்கன் பை, செக்ஸ் எஜுக்கேஷன் சீரிஸையெல்லாம் அப்படியே நாம் இங்கு எடுக்க முடியாது. முகம் சுழிப்பதுபோல படத்தில் எந்தக் காட்சியும் இருக்காது. அனைவரும் ரசிக்கக்கூடிய வகையிலான ஜாலியான படமாக மன்மத லீலை இருக்கும்” எனக் கூறினார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!