ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்

இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் சந்தித்துக் கொண்டு எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. 


தற்போது ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைக் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த மார்ச் 5-ந் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. ரசிகர்களின் படைச்சூழ இசைக் கச்சேரியில் இளையராஜாவும் கலந்துகொண்டு பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா திடீரென்று சென்றுள்ளார். இந்த நெகிழ்வான தருணத்தை ஏ.ஆர்.ரகுமானின் சமூக வலைத்தளப்பக்கத்தில் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!