தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர்.


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 


தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது.


சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணி தனித் தனி அணியாக போட்டியிட்டனர். 


இவர்கள் இருவரது அணிகள் சார்பிலும் செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டார்கள்.


இதில் இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, நேற்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்  மாலையில் எண்ணப்பட்டன. இதில் ஆ.கே.செல்வமணி 955 வாக்குகள் பெற்று மீண்டும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 


அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!