பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் கூடிய அந்த போஸ்டரில், அவரது கதாபாத்திரத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் ‘ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஒஹூந்திரன்’ என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாகவும், இந்த பெயரை சுருக்கமாக ‘ரேம்போ’ என அழைக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதையும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!