விவாகரத்து கேள்வியால் கடுப்பான வித்யூலேகா

மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள நடிகை வித்யூலேகா, விவாகரத்து குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர், தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.

அங்கு நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரை கடுமையாக விமர்சித்ததுடன் நீங்கள் எப்போது விவாகரத்து செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேள்வியும் எழுப்பினர்.

இதனால் கோபமடைந்த வித்யூலேகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நான் நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்ததால் உங்கள் விவாகரத்து எப்போது என்று கேட்கின்றனர். நீங்கள் 1920 காலத்தை விட்டு விட்டு 2021 காலத்துக்கு வாருங்கள். ஒரு பெண் உடை அணிவதே விவாகரத்துக்கு காரணமாகி விடும் என்றால் பாரம்பரிய உடைகள் அணிந்த பெண்கள் எல்லோரும் அவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

பாதுகாப்பு, நேர்மை, அன்போடு இருக்கிற கணவனை பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. உங்கள் நச்சு எண்ணங்களுக்காக என்னை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நீங்கள் வாழ்க்கையில் வேகமாக பின்னோக்கித்தான் போவீர்கள். பெண்களை பாலியல் ரீதியாகவே நீங்கள் பார்க்கிறீர்கள். வாழு வாழவிடு” என்று கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!