பேய் மாமா – விமர்சனம்

ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில பேய்கள் வசித்து வருகின்றனர். அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் பிளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி திட்டமிடுகிறார்கள்.

இறுதியில் யோகிபாபு வில்லன்களை பழிவாங்கினாரா? எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் எப்படி பேயாக மாறினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். ரஜினியின் சந்திரமுகி மற்றும் பேட்ட பட சாயலில் அறிமுகமாகிறார் யோகிபாபு. பல படங்களில் காட்சிகளை எடுத்து அதில் தன் பாணி டயலாக்கை சொல்லி நடித்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. மற்ற கதாபத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பேய் பங்களா கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். மற்ற படங்கள் போல் இப்படமும் வழக்கமான பேய் கதையாகவே இருக்கிறது. கதை மற்றும் காட்சிகளில் புதுமை இல்லை. வடிவேலு பேசிய டயலாக்குகளை எல்லாம் வைத்து பாடலாக உருவாக்கியுள்ளனர்.

இந்த பாடலை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. டி.வி. நிகழ்ச்சிகளை கிண்டல் செய்யும் காட்சிகள், யோகிபாபு பலரை திட்டும் காட்சிகள் கடுப்பை ஏற்படுத்துகிறது.

ராஜ் ஆர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஓரளவிற்கு கொடுத்து இருக்கிறார். ஒளிப்பதிவில் எம்.வி.பன்னீர்செல்வம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘பேய் மாமா’ சிரிக்க முடியலமா.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!