அருமையான நிகழ்வு… முதல்வருக்கு நன்றி – இயக்குனர் ஷங்கர் டுவிட்

இயக்குனர் ஷங்கர், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய ஆசிர்வாதம் மணமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், அந்த அருமையான நிகழ்வை என்றும் தங்களால் மறக்க முடியாது என்றும் ஷங்கர் கூறியுள்ளார்.

மேலும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!