‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? – இயக்குனர்கள் விளக்கம்

தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், இயக்குனர்கள் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இத்தொடரை இயக்கி உள்ளனர். இதில் நடிகை சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாகவும், மனித வெடிகுண்டாகவும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இந்த நிலையில் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் சமந்தா போராளி சீருடையில் குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ள இந்த தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சர்ச்சைக்கு விளக்கம் அளித்து ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளின் அடிப்படையில் யூகமான கருத்துகள் எழுந்துள்ளன. இந்த தொடரின் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் தமிழர்கள். தமிழ் மக்களையும் தமிழ் கலாசாரத்தையும் நன்கு அறிவோம்.

தமிழ் மக்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ளது. இந்த தொடருக்காக பல வருடங்கள் உழைத்துள்ளோம். அனைவரும் தொடர் வெளியாவதுவரை பொறுத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடரை பார்த்த பிறகு நீங்கள் பாராட்டுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!