பொருளாதார பிரச்சினையில் ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றவர்கள் போல் நானும் பொருளாதார பிரச்சினையில் இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகும் சலார் படத்திலும் நடிக்கிறார்.

ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ”கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கலாக உள்ளது. கொரோனா தொற்று முடிவது வரை காத்திருக்கவும் முடியாது. முக கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கில் இருப்பதும் இயலாத காரியம்.

மற்றவர்கள் போல் எனக்கும் பொருளாதார பிரச்சினை இருப்பதால் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே படப்பிடிப்புகள் தொடங்கியதும் நான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

கடந்த 11 ஆண்டுகளாக சுயமாக சம்பாதிக்கிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்கிறேன். எனது செலவுகளையும் நானே கவனித்துக்கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாக செயல்படுவதில் பெருமை கொள்கிறேன்.

கொரோனா தொற்றுக்கு முன் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறேன். கடவுள் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார் என்று நம்புகிறேன். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தற்போது வீட்டில் இருக்கிறேன். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!