பாகுபலி பாணியில் வெளியாகும் புஷ்பா

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் ரவிஷங்கர் வெளியிட்டுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புஷ்பா படம் குறித்த முக்கிய அப்டேட்டை, இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிஷங்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி புஷ்பா படம் பாகுபலி, கேஜிஎப் பட பாணியில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என தெரிவித்துள்ள அவர், இன்னும் 45 நாட்கள் படப்பிடிப்பு எஞ்சியுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா பரவல் குறைந்த பின் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!