கொரோனா பாதிப்பால் பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்

பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார்.

இந்தி திரையுலகில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம் கடந்த 1990-ம் ஆண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து இசையமைத்த பல படங்கள் வெற்றி பெற்றன. சாஜன் (1991), ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே (1993), பர்தேஸ் (1997) உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர்கள் ஒன்றாக பணியாற்றினார்கள். இதன்பின்னர் அவர்கள் கடைசியாக, தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் என்ற படத்தில் ஒன்றாக பணியாற்றினர். கடந்த 2005-ம் ஆண்டுக்கு பின்னர் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்காக மும்பையில் உள்ள ரகேஜா மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை ஷ்ரவன் சேர்க்கப்பட்டார். 66 வயதுடைய ஷ்ரவன் நேற்றிரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதனை அவரது மகன் சஞ்சீவ் ரத்தோடு உறுதி செய்துள்ளார். ரூ.10 லட்சம் பணம் கட்டாத சூழலில் ஷ்ரவனின் உடலை எடுத்து செல்ல மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்றும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

ஷ்ரவன் மறைவை தொடர்ந்து பலரும் டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!