தியேட்டரில் ரிலீசாகும் அதே நாளில் ஓடிடி-யிலும் வெளியாகும் சல்மான் கான் படம்

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக சல்மான் கான் நடித்துள்ள படம், ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாக உள்ளதாம்.

பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். ராதே படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் ரிலீசாகவில்லை. இதனால் கடந்த ஓராண்டாக வெளியிடப்படாமல் முடங்கிக் கிடந்த இப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ராதே படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுமா? என கேள்வி எழுந்து வந்தது. ஆனால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகும் என தெரிவித்துள்ள படக்குழு, படத்தின் வெளியீட்டில் சிறிய மாற்றத்தை செய்துள்ளனர்.

ராதே படம் தியேட்டரில் ரிலீசாகும் அதே நாளில் ஓடிடி-யிலும் வெளியாக உள்ளது. ஆனால் இதனை ஓடிடி-யில் ஒவ்வொரு முறை பார்ப்பதற்கும் பணம் கட்ட வேண்டுமாம். படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தால் படக்குழு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!