ரீமேக் செய்ய அனுமதி பெறவில்லை – இயக்குனர் ஷங்கருக்கு அந்நியன் பட தயாரிப்பாளர் நோட்டீஸ்

ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தில் ரெமோ, அம்பி, அந்நியன் ஆகிய மூன்று வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடித்து இருந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் ‘அந்நியன்’. இதில் ரெமோ, அம்பி, அந்நியன் ஆகிய மூன்று வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடித்து இருந்தார். தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ஷங்கர் இயக்குகிறார்.

இந்நிலையில், அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும், ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை பெறவில்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம் தான் முழு உரிமை இருக்கிறது.

ரீமேக் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் ரீமேக் செய்தால் அது சட்டப்படி குற்றம். பாய்ஸ் படம் தோல்வியடைந்து, உங்கள் இமேஜூக்கு பாதிப்பு வந்தபோது நான் தான் அந்நியன் பட வாய்ப்பை உங்களுக்கு கொடுத்து பழைய நிலைக்கு கொண்டு வந்தேன்.

ஆனால் இப்போது நீங்கள் என்னை தவிர்த்துவிட்டு அந்நியனை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது உங்களது கீழ்த்தரமான மனநிலையை காட்டுகிறது” என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!